செய்திகள்
ஒட்டன்சத்திரம் அம்மா உணவக ஊழியர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு
ஒட்டன்சத்திரம் அம்மா உணவக ஊழியர்கள் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அம்மா உணவகத்தில் 12 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மாற்றம் செய்து புதிதாக பணியாளர்களை நியமனம் செய்து நகராட்சி அறிவித்தது. வழக்கம்போல் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள் தங்களுக்கு வேலை இல்லை என தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அதேஇடத்தில் நின்று தங்களுக்கு பணிவழங்கும்படி கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி உத்தரவின்படி புதிதாக வேறு நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. உங்களது கோரிக்கையை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.