செய்திகள்
100 நாள் திட்ட தொழிலாளரை விவசாய பணிக்கு பயன்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை
100 நாள் திட்ட பணியாளரை விவசாய பணிக்கு பயன்படுத்துவதன் மூலம் ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
திருப்பூர்:
நாட்டின் உணவு உற்பத்தியில் விவசாய தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
இதர துறைகளை போன்று விவசாய தொழிலிலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இருந்தும், மனித சக்தி என்பது அவசியமானதாக உள்ளது. விவசாய தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. சமீப காலமாக ஆட்கள் பற்றாக்குறை என்பது மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்:
வயலில் 8 மணி நேரம் வேலை செய்யும் கூலி தொழிலாளருக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் சம்பளத்தை உயர்த்தியதன் காரணமாக விவசாயக் கூலிக்கு ஆள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளருக்கு ரூ.350, ரூ.400 வரை சம்பளம் கொடுத்து வேலைக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் பங்களிப்பு தொகையுடன் 100 நாள் திட்ட பணியாளரை விவசாய பணிக்கு பயன்படுத்துவதன் மூலம் ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விவசாய தொழிலும் மேம்படும் என்பதால் தமிழ்நாடு அரசு இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.