செய்திகள்
இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் போலீசார் நிற்பதை கண்டதும் அந்த வழியாக செல்லாமல் வாகனத்தை திருப்பிக்கொண்டு வேறு வழியாக செல்கின்றனர்.
உடுமலை:
தமிழக அரசு முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து மிகவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உடுமலை பகுதியில் ராஜேந்திரா சாலை, திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை, தளி சாலை உள்ளிட்ட பல சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், போலீசார் நிற்பதை கண்டதும் அந்த வழியாக செல்லாமல் வாகனத்தை திருப்பிக்கொண்டு வேறு வழியாக செல்கின்றனர்.
உடுமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முககவசம் அணியாமல் இருந்த 12 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார். அத்துடன் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களிடம் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாநகரிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.