செய்திகள்
சிவகாசி அருகே முதியவர் தவறி விழுந்து பலி
சிவகாசி அருகே முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி சிவன்கோவில் நந்தவன தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 62). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி காமராஜர்புரம் காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் முத்துராமலிங்கத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.