செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 666 கன அடியாக சரிவு

Published On 2021-07-28 04:31 GMT   |   Update On 2021-07-28 04:31 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு 31 ஆயிரத்து 814 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் நேற்று 36 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 31 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 34 ஆயிரத்து 141 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 29 ஆயிரத்து 666 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 77.43 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 79.16 அடியானது. இதனால் ஒரே நாளில் சுமார் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News