உள்ளூர் செய்திகள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கிருமாம்பாக்கம் ஏரி
சமூக விரோதிகளின் கூடாரமாக கிருமாம்பாக்கம் ஏரி திறந்தவெளி மதுபாராக செயல்படுகிறது
புதுச்சேரி:
புதுவை கிருமாம்பாக்கம் ஏரி கடந்த ஆட்சியில் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்டது. ஏரியில் படகு சவாரியும் நடந்தது.
ஏரிக்கரை பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் ஏரியின் அழகையும் அங்கு வந்து செல்லும் பறவைகளை காணும் வகையிலும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால் அங்கு நடந்த மேம்பாட்டு பணிகள் தொடராமல் கைவிடப்பட்டு உள்ளது.
தற்போது ஏரி சமூக விரோதிகளின் கையில் சிக்கி திறந்தவெளி மதுபான கூடாரமாக மாறிவிட்டது. இந்த பகுதியை சேர்ந்த மதுபான பிரியர்கள் பலர் இங்கு மது அருந்தி செல்வதை வழக்கமாகி வருகிறார்கள்.
மேலும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் வெளியூர் நபர்களும் இந்த இடத்தில் மது அருந்தி செல்வதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி குடித்த மதுபான பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் இதர பொருட்களை அப்படியே ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏரிக்கரை முழுவதும் அசுத்தமாக மாறி அரு வருக்கத்தக்க வகையில் மாறியுள்ளது.
இதனை புதுவை அரசு உடனடியாக சீரமைத்து ஏரியின் அழகையும் இயற்கை வளத்தையும் பாதுகாத்திட வேண்டும் என இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.