செய்திகள்
பாபநாசம் அருகே சுற்றுலா வேன் மோதி வாலிபர் பலி
பாபநாசம் அருகே சுற்றுலா வேன் மோதி வாலிபர் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டை ராஜேந்திரன் அடி தெருவைச்சேர்ந்தவர் அஜய் (வயது 18). சம்பவத்தன்று அஜய், அவரது நண்பர்கள் ஆகாஷ் (17), மணிவாசன் (18) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜகிரிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆகாஷ் ஒட்டி சென்றார். இவர்கள் பண்டாரவாடை பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே தஞ்சையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக சென்ற சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தலைகுப்புற கீழே விழுந்தனர். இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த மணிவாசன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அஜய் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அஜய் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுற்றுலா வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.