ஆன்மிகம்
சிவன்

விலங்குகள் வழிபட்ட சிவ தலங்கள்

Published On 2021-04-07 02:49 GMT   |   Update On 2021-04-07 02:49 GMT
மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக, இறைவனை வழிபட்டு வந்ததாக, புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக, இறைவனை வழிபட்டு வந்ததாக, புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அப்படி விலங்குகள் வழிபட்ட சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சிவபெருமானை, புலி வழிபட்ட தலம், திருப்புலி வனம். காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருத்தலத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் இறைவன் அருள்கிறார். சாபத்தால் புலியாக மாறிய முனிவர், இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

சிவபெருமானை, பசு வழிபட்ட தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள இந்த திருத்தலத்தில் தேவர்கள் சூழ, இறைவனை அம்பாள் வழிபாடு செய்திருக்கிறாள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். எனவே பசு வழிபட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவி ‘கோமதி’ என்று பெயர் பெற்றிருக்கிறாள்.

சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம், திருவானைக்காவல். திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் - கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது. இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிவலிங்கத்தின் மேல் வலை பின்னிய சிலந்தி, அதன் மூலம் வெயில், மழை, மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலை பின்னி வழிபாட்டை தொடரும். யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன், யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.

எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம், திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பிரசாதத்தை எறும்புகள் எடுத்துக்கொள்வதை இன்றும் காணலாம்.

ஈ - வடிவில் அகத்திய முனிவர், சிவனை வழிபட்ட தலம் , திருஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம், தொட்டியம்- முசிறி செல்லும் வழியில் இந்த திருத்தலம் இருக்கிறது.

பாம்புகள், சிவபெருமானை வழிபட்ட தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

அணில், குரங்கு, காகம் ஆகிய மூன்று ஈசனை வழிபட்ட தலம் ‘குரங்கணில்மூட்டம்.’ சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும், இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் என்னும் இடத்தில் உள்ளது.

மயில், சிவபெருமானை வழிபட்ட தலம் மயிலாடுதுறை. சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை, சிவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

கழுகு, சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருவதாக சொல்லப்படுகிறது.

வண்டு, சிவபெருமானை பூஜித்த தலம் திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார். இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

நண்டு, சிவபெருமானை வழிபட்ட தலம், திருந்துதேவன்குடி. சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன், இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

சக்கரவாகப் பறவை, சிவபெருமானை பூஜித்த தலம் திருச்சக்கராப்பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

யானை, சிவனை பூஜித்த தலம், திருக்கொட்டாரம். துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

ஆமை, சிவபெருமானை பூஜித்த தலம் திருக்கச்சூர். இங்குள்ள சிவனை வழிபட்டுதான், மந்தார மலையை தாங்கும் சக்தியை திருமால் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

கிளி வழிபட்ட தலம், சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில். கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவ பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்கிறார்.

சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம், வட குரங்காடுதுறை. தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இத்தல ஈசன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.
Tags:    

Similar News