செய்திகள்
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து வரும் 24-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. யூனியன் பிரதேசமான காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் வரும் 24-ம் தேதி ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடக்கிறது.
இந்நிலையில், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதிருப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன கொள்கைகள் மீதான நேரடி தாக்குதல் என காங்கிரஸ் நம்புகிறது.
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கி தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும், டெல்லியில் இருந்து ஆட்சி செய்வதற்கு பதிலாக மாநிலத்தில் சொந்தமாக சட்டமன்றத்தை உருவாக்கி தங்கள் நலன்களை அவர்களே பெற்றுக் கொள்ளவும் முடியும். இது குறித்து பிரதமரும், பா.ஜ.க.வும் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.