செய்திகள்
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு
மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
கடந்த திங்கட்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்னை ஐகோர்ட் வழங்கிய பரோல் காலம் நிறைவடைவதால், பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பேரறிவாளன் சிகிச்சைக்கு செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
பரோல் காலம் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.