செய்திகள்
கோப்புபடம்

தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Published On 2021-06-11 18:15 GMT   |   Update On 2021-06-11 18:15 GMT
தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:

தமிழகத்தில் நாளை (12-ந்தேதி) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ரூ.65 கோடி செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தென்னலக்கூடி கூப்பிடுவான் உப்பனாற்றை தூர்வார கடந்த 10 நாட்களுக்கு முன் அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஆற்றை முறையாக தூர்வாராமல் பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றம் சாட்டி விவசாயிகள், ஆற்றில் இறங்கி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழை வெள்ள காலங்களில் செம்பதனிருப்பு, காத்திருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வடிகாலாக இந்த கூப்பிடுவான் உப்பனாறு திகழ்வதாகவும், இந்த உப்பனாற்றை சரிவர தூர் வாராததால் மேற்கண்ட கிராமங்கள் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் உடனடியாக உப்பனாற்றை சரியாக தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News