உள்ளூர் செய்திகள்
19-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் 19-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் சிறார்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 21.10 லட்சம் பேர் உள்ளனர். இதில் தற்போது வரையில் 20 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 13.34 லட்சம் பேருக்கு 2வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 19-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்தப் பணிக்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,544 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தடுப்பூசி முகாம்களை கலெக்டர் வீனித் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.