செய்திகள்
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒரு தெருவில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

கயத்தாறு அருகே கொரோனாவுக்கு கணவர் பலி- மனைவிக்கு தீவிர சிகிச்சை

Published On 2021-04-30 18:17 GMT   |   Update On 2021-04-30 18:17 GMT
கயத்தாறு விவேகானந்தர் தெரு, பாரதியார் தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கயத்தாறு:

கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக 2 முதல் 4 பேர் வரை கொரோனா அறிகுறி தெரியவந்தது. அவர்களை கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று கயத்தாறு ஆசாத் தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாசில்தார் பேச்சிமுத்து, சுகாதார ஆய்வாளர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி நிர்வாக அலுவலர் கணேசன், ஆகியோர் அந்த தெருவின் இருபுறமும் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று போர்டு வைத்தனர். அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதே போல் கயத்தாறு விவேகானந்தர் தெரு, பாரதியார் தெருவில் 2 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கயத்தாறில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதமும், இலவச முககவசமும் வழங்கினர். மேலும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் வீதிவீதியாக சென்று அபராதம் விதித்தனர்.

கயத்தாறு அருகே உள்ள கம்மாபட்டி கிராமத்தில் கடந்த 26-ந் தேதி கொரோனா தொற்று காரணமாக கணவன்- மனைவி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண்ணின் கணவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News