செய்திகள்
கோப்புபடம்.

மழைநீரை சேகரிக்க 65 ஊராட்சிகளில் 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க திட்டம்

Published On 2021-10-10 07:16 GMT   |   Update On 2021-10-10 07:16 GMT
திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளிலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. அதன்படி வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளிலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலர் டாக்டர் கோபாலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அவ்வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பி.டி.ஓ., மீனாட்சி, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், துணை பி.டி.ஓ.,க்களுக்கு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் கூறியதாவது:-

தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சிகள் தோறும் மழைநீர் சேகரிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஊராட்சிகளில் தலா 5 பண்ணைக்குட்டை, குளம், குட்டை மற்றும் பொது இடங்களில் சிறு குழிகள் அமைத்து மழைநீரை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அடுத்த இரண்டு மாதத்திற்குள் 265 ஊராட்சிகளில் 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தில் 5 மீட்டர் நீளம் மற்றும் அகலம், 1.50 மீட்டர் ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்க ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 

மழைநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் தேக்குவதன் மூலம் நிலத்தடி நீராதாரம் செறிவூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News