உள்ளூர் செய்திகள்
வேலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன், மாவட்ட தலைவர் லோகேஷ், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் உமாபதி துணைத்தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை தலைவர் தேவதாஸ் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சங்கர் மேஸ்திரி கவுரவத் தலைவர் கோவிந்தராஜ் சட்ட ஆலோசகர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். எப்.சி கட்டண உயர்வு, வாகன பதிவு சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ், புதுப்பிக்க சான்றிதழ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் .சுங்கச்சாவடி கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
வாகனங்கள் மீது போடப்படும் புதிய அபராத கட்டணத்தை குறைக்க வேண்டும். வாகன சோதனை என்று பொய் வழக்கு, ஆன்லைனில் வழக்கு, கெடுபிடி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். வேலூர் மாநகரில் தினம் தினம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சாலை வழித்தடத்தை மாற்றி அமைப்பது கைவிடவேண்டும்.
யாரோ ஒரு நபர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறி ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.