செய்திகள்
கல் வீசுபவர்களுக்கு பாஸ்போர்ட் அனுமதி கிடையாது- காஷ்மீர் போலீஸ் அறிவிப்பு
அரசு திட்டங்களை பெற விண்ணப்பித்தவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனரா என்பதை சரிபார்க்க வேண்டும் என காஷ்மீர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
கல் வீசுபவர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான ஒப்புதலை அளிக்கக் கூடாது என்று காஷ்மீர் போலீசின் சி.ஐ.டி. சிறப்பு பிரிவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, கள ஆய்வில் ஈடுபடும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாஸ்போர்ட், இதர சேவைகள், அரசு திட்டங்களை பெறுதல் போன்றவற்றுக்காக போலீஸ் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டுள்ளாரா?, கல் வீச்சில் ஈடுபட்டுள்ளாரா?, மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகமான குற்றங்களை செய்துள்ளாரா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
மேலும், உள்ளூர் போலீஸ் நிலைய ஆவணங்களை வாங்கியும் சரிபார்க்க வேண்டும். பாதுகாப்பு படையினரிடம் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம், வீடியோ, ஆடியோ டேப், டிரோன் படங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். எவராவது மேற்கண்ட காரியங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால், அவருக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளாா்.