செய்திகள்
மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் பலி
மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தென்பாதி கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன். இவருடைய மகன் அருள்முருகன்(வயது16). 11-ம் வகுப்பு மாணவரான அருள்முருகன் நேற்று தனது நண்பர்களுடன் அருகில் சோழபாண்டி பகுதியில் உள்ள திருத்தணன் குளத்தில் குளிக்க சென்றாா். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது அருள்முருகன் எதிர்பாராத விதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீரில் மூழ்கினார். உடனே அருகில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் அருள் முருகனை தேடினர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த அருள்முருகனின் உறவினர்கள் மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி குளத்தில் இருந்து அருள்முருகனை பிணமாக மீட்டனர். குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.