வழிபாடு
திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி: கடற்கரைக்கு செல்ல தடை

Published On 2021-12-31 07:45 GMT   |   Update On 2021-12-31 07:45 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்தவும், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு நலச்சங்கங்கள் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதி உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட களக்காடு தலையணையில் நாளை (1-ந் தேதி) சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது.

இதனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் இன்று யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்த குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
Tags:    

Similar News