உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் போலீஸ்காரரை தாக்க முயன்ற ஒருவர் கைது
களக்காட்டில் போலீஸ் ஏட்டு ரோந்து சென்றபோது அவரை பணிசெய்ய விடாமல் வழிமறித்து சகோதரர்கள் 2 பேர் தாக்க முயன்றனர். இதில் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஸ்ரீகோவிந்தபேரில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் ஏட்டு பெருமாள் தலைமையில் போலீசார் ஸ்ரீகோவிந்த பேரிக்கு ரோந்து சென்று சோதனையிட்டனர்.
அங்குள்ள கால்வாய் பாலத்தில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த வெட்டும் பெருமாள் என்ற வெட்டன் (48), அவரது அண்ணன் தங்கபிச்சை (58) ஆகியோர் போலீசாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
எங்கள் ஊரில் மது பாட்டில் விற்கத்தான் செய்வார்கள். நீங்கள் பிடிக்கக் கூடாது என்று கூறியதுடன் மீறி பிடித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து, அவதூறாக பேசினர்.
மேலும் கம்பால் தாக்கவும் முயற்சி செய்தனர். எனினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வெட்டும்பெருமாளை கைது செய்தனர். தங்கபிச்சை தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய தங்க பிச்சையை தேடி வருகின்றனர்.