ஒட்டப்பிடாரம் அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி
ஒட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ராஜீவ் காலனியை சேர்ந்தவர்கள் காளிங்கம் (வயது 37), சாமிநாதன் (31). நண்பர்களான இவர்கள் இருவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் எப்போதும் வென்றான் அருகே உள்ள தளவாய்புரத்திற்கு கட்டிட வேலைக்கு சென்றனர்.
மதியம் சாப்பிடுவதற்காக பசுவந்தனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் மீண்டும் தளவாய்புரத்திற்கு திரும்பி சென்றனர். மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புசுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காளிங்கம், சாமிநாதன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.