செய்திகள்
கவர்னர் வாகனத்தை குறிவைத்து தாக்குதல்

ஆப்கானிஸ்தான்: கவர்னர் சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் - 8 பேர் பலி

Published On 2020-10-05 23:51 GMT   |   Update On 2020-10-05 23:51 GMT
ஆப்கானிஸ்தானில் மாகாண கவர்னர் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த குழுவுடனான அமைதி பேச்சுவார்த்தையை மேம்படுத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அச்ரப் ஹுலானி நேற்று தோகா சென்றடைந்தார்.

அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் லஹ்மேன் மாகாண கவர்னரான ரகமதுல்லா யார்மல் நேற்று தனது அலுவலகம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

மிஹ்டர்லாம் என்ற பகுதியில் ரகமதுல்லாவின் கார் வந்தபோது சாலையின் எதிரே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு காரை ஓட்டிவந்த தலிபான் பயங்கரவாதி ரகமதுல்லாவின் வாகன அணிவகுப்பு மீது மோதி வெடிக்கச்செய்தான். 

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ரகமதுல்லாவின் பாதுகாவளர்கள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். ஆனால், இந்த தாக்குதலில் ஆளுநர் ரகமதுல்லா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அமைதியை 
சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே கருத்தப்படுகிறது.
Tags:    

Similar News