ஆன்மிகம்
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-11-05 05:25 GMT   |   Update On 2021-11-05 05:25 GMT
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 9-ந்தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் 7-வது படைவீடு என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்ரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. இதையடுத்து 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு உச்சி கால பூஜை, 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து கருவறையை அடுத்து உள்ள மகாமண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு சுப்ரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங் களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொள்கின்றனர். மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடக்கிறது. 9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.

மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை திருக்கோவில் உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News