உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல் அருகே நிலநடுக்க பீதி

Published On 2022-01-12 08:15 GMT   |   Update On 2022-01-12 08:15 GMT
திண்டுக்கல் அருகே பல்வேறு கிராமங்களில் அதிக சத்தத்துடன் ஒலி எழுந்ததால் நிலநடுக்க பீதி ஏற்பட்டது
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தாழ்வாக விமானங்கள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் குஜிலியம்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது அதிக சத்தம் உண்டாகி பொதுமக்களை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில் இன்று பகல் 11 மணியளவில் அதிக சத்தத்துடன் அடுத்தடுத்து 2 முறை பொதுமக்கள் மத்தியில் உணரப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த மக்கள் வெளியேறி அக்கம் பக்கத்தில் ஏதேனும் வெடித்து விட்டதோ என்ற அச்சத்தில் பார்க்கத் தொடங்கினர்.

அருகில் வசிக்கும் தெருவில் உள்ள மக்களிடமும் தொலைபேசி மூலம் கேட்டபோது தாங்களும் அந்த சத்தத்தை உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அது எங்கிருந்து வந்தது? என தெரியவில்லை.

கடந்த 1 மாதத்துக்கு முன்பு தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. அது போன்ற சம்பவம் தங்கள் பகுதியில் நிகழ்ந்து விட்டதோ என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதே போன்று ராஜக்காபட்டி சிலுவத்தூர், செங்குறிச்சி, வி.எஸ்.கோட்டை, கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த சத்தம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வடமதுரை, அய்யலூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த சத்தம் வெளி வந்திருக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வப்போது ஏற்படும் இது போன்ற வினோத சத்தத்தால் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே வாழ வேண்டியது உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News