வழிபாடு
உற்சவர் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை நம்மாழ்வார் மோட்சம்

Published On 2021-12-23 05:48 GMT   |   Update On 2021-12-23 05:48 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தில் நேற்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான 14- ந்தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 9.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு பரமபதவாசல் கடக்கிறார். காலை 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். நம்பெருமாள் இன்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடத்தி காட்டப்படும்.

பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளிப்பார். அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பிப்பர்.

பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடுவர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றுவர்.

பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவிப்பர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்படும். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்குவர்.

பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளிப்பார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறும். அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News