ஆன்மிகம்
குரு பகவான்

சாய்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி

Published On 2021-04-30 08:35 GMT   |   Update On 2021-04-30 08:35 GMT
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் யாழ்மூரிநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி, பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் யாழ்மூரிநாதர் கோவிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி அந்த இசையை ரசித்துக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி, பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள்.

ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

* தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோவில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்’ இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில்தான் என தல புராணம் கூறுகிறது.
Tags:    

Similar News