செய்திகள்
சுபி ஜெயின்

அழகு நடனம் மூலம் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம்பெண்

Published On 2019-11-19 10:53 GMT   |   Update On 2019-11-19 11:48 GMT
மத்திய பிரதேசத்தில் எம்பிஏ படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சுபி ஜெயின் (23). இவர் புனேவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துவருகிறார். 

இதற்கிடையில் தனது பட்டப்படிப்பின் ஒரு அங்கமான இன்டர்ன்ஷிப் எனப்படும் பகுதி நேர நிகழ்ச்சியில் 15 நாட்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலராக செயல்பட விரும்பினார். 

இதையடுத்து இந்தூர் பகுதி போலீஸ் கூடுதல் ஆணையரை அணுகிய சுபி தனது விருப்பத்தை வேண்டுகோளாக கூறினார். மாணவியின் வேண்டுகோளை ஏற்ற ஆணையர் சுபி ஜெயினுக்கு டிராபிக் போலீஸ் உடை வழங்கி 15 நாட்கள் இந்தூர் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி அளித்தார்.



இதையடுத்து, டிராபிக் போலிஸ் உடையில் மாணவி சுபி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட்கள் அணிதல் போன்ற போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவதை தனது அழகு நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். 



மேலும், சாலை விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு அவர் தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தனது இந்த முயற்சிக்கு இந்தூர் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சுபி ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ரஞ்சித் சிங் என்ற டிராபிக் போலீஸ் மைக்கேல் ஜாக்சன் நடனம் மூலம் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News