ஆன்மிகம்
சிவப்பு சாத்தி கோலத்தில் வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய சுவாமி சண்முகர்.

திருச்செந்தூரில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா

Published On 2019-08-27 05:01 GMT   |   Update On 2019-08-27 05:01 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் நாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் உருகு சட்டசேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம், வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலையில் சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி, சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேலக்கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபம் வந்து சேர்ந்தார்.

8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்கள்.

நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி-அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார். இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

10-ம் நாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News