செய்திகள்
ஐபிஎல் சூதாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது
மும்பை மற்றும் ஒடிசா அணிகளுக்காக விளையாடியுள்ள ராபின் மோரிஸ், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி நடைபெறும்போது லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மும்பை அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரர் ராபின் மோரிஸ், வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் சூதாட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
ராபின் மோரிஸ் மும்பை மற்றும் ஒடிசா அணிகளுக்காக 1995 முதல் 2007 வரை 44 முதல்தர போட்டிகளிலும், 51 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் ஏற்கனவே கடன் வாங்கிய விவகாரத்தில் ஏஜென்ட்-ஐ கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.