ஆன்மிகம்
வள்ளல் களஞ்சியம் குடும்பத்தினர் வழிபாடு செய்த போது எடுத்த படம்.

ராமநாதபுரம் ஆற்றங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழா

Published On 2021-03-13 02:52 GMT   |   Update On 2021-03-13 02:52 GMT
ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கருப்பணசாமி கோவிலில் மாசி களரி விழாவில் லட்சுமி நாச்சியார் களஞ்சியம் அன்னதானம் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் ஆற்றங்கரையில் ஆறும், கடலும் சங்கமிக்கும் மைய பகுதியில் கருப்பணசாமி, ராக்கச்சியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த பரிவார தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் மாசி களரி விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் ஆகியவற்றை நீண்ட காலமாக இந்த மாவட்ட மக்களால் வள்ளல் என்று அழைக்கக்கூடிய டாக்டர் ரா.களஞ்சியம் தொடர்ந்து வழங்கி வந்தார்.

இதுதவிர பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், சீருடைகள் போன்ற நலத்திட்ட உதவிகளும், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டும், தொழில், கல்வி, மருத்துவ உதவிகளும் செய்து வந்தார். அவரை தொடர்ந்து அவரது மூத்த மகன் பொறியாளர் வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் டாக்டர் சிவக்குமார், நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தங்களது தந்தை வழியில் தொடர்ச்சியாக பல நலத்திட்டங்களை மாவட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் மாசி களரி திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு 101 கிடாய்கள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர் களஞ்சிய தேவரின் மனைவி லட்சுமி நாச்சியார், மகன்கள் பொறியாளர் வெங்கட்ராமன், டாக்டர் சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் மற்றும் மருமகள் ரம்யா வெங்கட்ராமன், பேரன், பேத்திகள் ஆகியோர் சாமிக்கு பாரம்பரிய முறைப்படி பனை ஓலை பட்டையில் உணவு படைத்து வழிபட்டனர். பின்பு அதனை வயது முதிர்ந்த ஏழைகளுக்கு வழங்கினர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்டமான பந்தலில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொறியாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அவரது தாயார் லட்சுமி நாச்சியார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். டாக்டர் சிவக்குமார், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் அன்னதானம் வழங்கினர்.

விழாவில் ஆற்றாங்கரை ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா, துணைத்தலைவர் நூருல் அபான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அவர்களுக்கு களஞ்சியத்தேவரின் குடும்பத்தின் சார்பில் வெங்கட்ராமன் சால்வை அணிவித்து வரவேற்றார். களஞ்சியத்தேவரின் வழியில் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, மருத்துவம், விளையாட்டு, தொழில் உள்ளிட்டவைகளுக்கு உதவி செய்து வருவதோடு கொரோனா உச்சக்கட்ட காலங்களில் ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதற்காக பொறியாளர் ஆர்.கே.வெங்கட்ராமனை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதேபோல அவரது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற மாசி களரி விழாவில் மதுரை, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஸ்டார் ரெசிடென்சி ஓட்டல்களின் மேலாளர்கள், அலுவலர்கள், ஹை பவர் வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சாய் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், போலீசார், அரசு அலுவலர்கள், வர்த்தக பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாசி களரி விழாவில் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை முரளிராஜா, மண்டபம் சேகர், ரகுபதி ராஜா, சேர்வைக்காரன் ஊருணி மேகவர்ணம், பெருங்குளம் மூர்த்தி உள்ளிட்ட களஞ்சியத் தேவரின் உறவினர்கள், குடும்பத்தி னர்கள், நண்பர்கள் பலர் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் டாக்டர் களஞ்சியத்தேவர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News