ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயில் கட்டணம் பாதியாக குறைப்பு
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரிக்கு 105 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை அமைக்கப்படும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் பயணிகளை கவரும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் மெட்ரோ ரெயில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண சலுகை ஒரு ஆண்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு சலுகை வழங்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களில் மெட்ரோ ரெயில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை இந்த கட்டண சலுகை நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. மெட்ரோ ரெயில்களில் வார வேலை நாட்களில் சராசரியாக 1.20 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களில் 70 ஆயிரம் பயணிகள் மட்டும் பயணம் செய்கிறார்கள். எனவே விடுமுறை தினங்களில் பயணிகள் கூட்டத்தை அதிகரிக்கும் விதமாக 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.