செய்திகள்
டோனி, பிராவோ

பெங்களூரை வீழ்த்தி சி.எஸ்.கே. மீண்டும் முதலிடம் - பிராவோவுக்கு டோனி பாராட்டு

Published On 2021-09-25 07:30 GMT   |   Update On 2021-09-25 07:30 GMT
எங்களது பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசவில்லை என தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஷார்ஜா:

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 157 ரன் இலக்காக இருந்தது.

படிக்கல் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) , கேப்டன் விராட் கோலி 41 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர்) எடுத்தனர். பிராவோ 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாகர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்தில் 38 ரன்னும் (4பவுண்டரி 1 சிக்சர்), அம்பதி ராயுடு 22 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), டுபெலிசிஸ் 26 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

சி.எஸ்.கே. பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. சென்னையும் , டெல்லியும் தலா 14 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளதால் சி.எஸ்.கே. முதல் இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. டோனி மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 14-வது ஓவரில் பிராவோவை பந்து வீச அழைத்தார். அதற்கு பலன் கிடைத்தது. விராட் கோலி, மேக்ஸ்வெல், ஹர்சல் பட்டேல் ஆகிய 3 விக்கெட்டை பிராவோ கைப்பற்றினார்.

இந்தப்போட்டிக்கு பிறகு பேசிய டோனி ஆல்ரவுண்டர் பிராவோவை வெகுவாக பாராட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பிராவோவை நான் என் சகோதரன் என்று அழைக்கிறேன். அவர் எப்போதுமே பந்தை மெதுவாக வீசுவார் என்று எல்லோருக்கும் தெரியும். நான் அவரிடம் 6 பந்தையும் வெவ்வேறு விதமாக வீசுமாறு கூறினேன். அதற்கு ஏற்ப அவர் சிறப்பாக செயல்பட்டார்.

ஆடுகளத்திற்கு தகுந்தவாறு எங்களது செயல்பாடு இருந்தது. இதனால் இந்த வெற்றியை பெற்றோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

பெங்களூர் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் 2-வது தோல்வியை தழுவியது. ஒட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. ஆனாலும் அந்த அணி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நாங்கள் 175 ரன் வரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எங்களது பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசவில்லை” என்றார். 

Tags:    

Similar News