செய்திகள்
கோப்புபடம்

பணம் கேட்டு தகராறு - தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை

Published On 2020-10-20 06:42 GMT   |   Update On 2020-10-20 06:42 GMT
கோவையில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). சமையல் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்து சாலையோரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தேவாலயம் அருகே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிகாலை 3 மணியளவில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள், திடீரென்று பாலகிருஷ்ணனை எழுப்பினர். இதனால் திடுக்கிட்டு எழுந்த பாலகிருஷ்ணன், அவர்களிடம் ஏன் என்னை எழுப்பினீர்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அங்கு கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து பாலகிருஷ்ணன் தலையில் போட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் அலறித்துடித்தபடி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News