செய்திகள்
கொள்ளை

அறந்தாங்கியில் ஒரே நாள் இரவில் 7 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2021-09-17 10:47 GMT   |   Update On 2021-09-17 10:47 GMT
அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி மீமிசல் கடை வீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் இரவு, பகல் என எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, கடையை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல் கடை திறப்பதற்காக உரிமையாளர்கள் வந்த போது அப்பகுதிகளில் தொடர்ந்து 10 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதில் மளிகைகடைகள் 3, மருந்து கடை 1, ஷாப்பிங் சென்டர் 1, கட்டுமான வேலைக்கு பொருட்களை வாடகைக்கு விடும் கடை1, பெட்டிக்கடை 1 ஆகிய 7 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

மற்ற 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து 7 கடை உரிமையாளர்களும் தனித்தனியாக மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் வழக்கு பதிவு செய்து, கொள்ளை நடந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிறகு அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்.

மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News