வழிபாடு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த போது எடுத்த படம்.

விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா

Published On 2022-02-14 08:40 GMT   |   Update On 2022-02-14 08:40 GMT
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து மாசிமக பெருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பஞ்ச மூர்த்தி கள் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் 6-ம் திருவிழாவான விருத்தகிரீஸ்வரர் இந்த கோவிலில் திருப்பணி மேற்கொண்ட விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள, விபசித்து முனிவர் தனி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது பஞ்ச மூர்த்தி களுக்கும், விபசித்து முனிவருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் நேர் எதிரே மண்டபத்தில் அமர்ந்திருந்த விபச்சித்து முனிவருக்கு காட்சி தந்தனர். அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் விபசித்து முனிவருக்கு காட்சி கொடுத்து, கோவிலை வலம் வந்து, கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். பின்னர் விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி நான்கு கோட்டை வீதியில் வீதிஉலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் நாளை மறுநாள்(புதன்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 17-ந்தேதி மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும், 18-ந்தேதி தெப்ப உற்சவம், 19-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்ப நிகழ்ச்சியும், மார்ச்-1 ந் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News