செய்திகள்
மேட்டூர் அணை

தொடர்ந்து 14 நாட்களாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

Published On 2021-11-27 04:08 GMT   |   Update On 2021-11-27 04:08 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 20 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது.

அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த 14-ந்தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. இன்று காலையும் அணையில் இருந்து காவிரியில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 14 நாட்களாக 120.10 அடியாக நீடிக்கிறது. இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News