திருட்டு வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் மர்ம மரணம்
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் முகமது பாஷா. இவர் சித்தூர் 2-டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் சித்தூரை சேர்ந்தவர் இம்தியாஸ். ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் இரவில் ரோந்து பணிக்கு செல்லும் போது அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
சித்தூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் திருட்டு நடந்தது.இது குறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் சித்தூர் 2- டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளி கடையில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட முகம்மது பாஷா, இம்தியாஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட இருவரையும் எஸ்.பி. செந்தில்குமார் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த முகமது பாஷாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். சிறைத்துறை அதிகாரிகள் முகமது பாஷாவை மீட்டு சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முகமது பாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பாஷா சிறையில் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது உடல்நல பாதிப்பால் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.