செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு
பள்ளிக்கல்வித்துறை மெட்ரிக்குலேசன் இணை இயக்குனர் ஆனந்தி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறப்பதற்கு ஏதுவாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறந்து செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலும் இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாநகரில் உள்ள நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதுபோல் பள்ளிகளில் இருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றும் பணியும் நடந்தது.
இதில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினியும் தெளித்து சுத் தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மெட்ரிக்குலேசன் இணை இயக்குனர் ஆனந்தி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறப்பதற்கு ஏதுவாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் 14 வட்டார கல்வி அலுவலர்கள், 4 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளி திறப்பு குறித்தும் அறிவுரை வழங்கினார். நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆர்வமுடன் உள்ளனர்.