உள்ளூர் செய்திகள்
வட்டி சமநிலை திட்டம் நீட்டிப்பு - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
கொரோனாவின் இரண்டு அலைகளால் ஆடை ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
வட்டி சமநிலை திட்டத்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் மத்திய நிதித்துறை, ஜவுளித்துறை அமைச்சர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு வழங்கும் சலுகைகளே இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு உலக சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொண்டு வர்த்தகத்தை வசப்படுத்த கைகொடுத்து வருகிறது. கொரோனாவின் இரண்டு அலைகளால் ஆடை ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டிச் சலுகை அளிக்கும் திட்டம், செப்டம்பர் மாதத்துக்குப்பின் நீட்டிக்கப்படவில்லை. வட்டி சமநிலை திட்டத்தை கடந்த அக்டோபர் முதல், அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.