ஆன்மிகம்
12 ராசி

அதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Published On 2021-01-16 08:12 GMT   |   Update On 2021-01-16 08:12 GMT
சில எளிய பரிகாரங்களை நாம் செய்து வந்தால் நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்க்கலாம்...
ஒரு மனித பிறப்பில் அவர் பெறக்கூடிய நல்ல பலன்களும், திய பலன்களும் அவரவர் செயல்களைப் பொறுத்தும், சுய ஜாதகத்தைப் பொறுத்தும் தான் அமையும் என்பது ஜோதிட விதி. இருப்பினும் நம் சில எளிய பரிகாரங்கள் நாம் செய்து வர நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்ப்போம்...

மேஷ ராசியினர் கஷ்டமான நேரத்தில் கூட வாழ்வில் நல்ல பலனைப் பெற, தங்களுடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவுவது தான் மிகச் சிறந்த பரிகாரமாகும். ராசி அதிபதி செவ்வாய் பகவானின் அருள் பெற உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வது தான் மிகச் சிறந்த பரிகாரம்.

ரிஷப ராசிக்காரர்களின் ராசி அதிபதி சுக்கிர பகவான். அதனால் வெள்ளிக்கிழமை தோறும் அவருக்கு விருப்பமான வெள்ளை நிற பூக்களை கொண்டு கையில் ஏந்தியவாறு, ஓடும் ஆற்று நீர், ஓடையில் நின்று “ஓம் சுக்ராயே நமஹ்” என்ற மந்திரத்தை 6 முறை துதித்துவிட்டு அந்த பூக்களை நீரில் விட வேண்டும். வெள்ளை நிற உணவு பொருள், தானியங்களைத் தானமாக அளிக்கலாம்.

மிதுன ராசியினர் தினமும் மகாலட்சுமியை வணங்குவது அவசியம். பழனி முருகனை வணங்குவதும், ஒரு நாள் அங்கு சென்று தங்கி முருகனை வணங்கி யாசகர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் நாம் செய்த பாவ தோஷங்கள் நீங்கி வாழ்வில் பல்வேறு வகையில் நன்மைகள் ஏற்படும்.

கடக ராசியினர் சந்திர தரிசனம் செய்வது சிறப்பானது. இந்த ராசியினர் பச்சை மற்றும் வெள்ளை நிற ஆடைகள், கைக்குட்டைகள் பயன்படுத்தி வருவதால் பல்வேறு வகையில் பாதங்கள் நீங்கி அதிர்ஷ்ட வாய்ப்புகள், நன்மைகள் உண்டாகும்.

சிம்ம ராசி அதிபதி சூரியன். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையின் 7ம் நாள் குளித்து சுத்தமாக சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுவதும், சூரிய நாராயணரை வணங்குதல், மகா விஷ்ணுவை வழிபடுவது மிக அவசியமாகும்.

கன்னி ராசியினர் நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடுவது அவசியம். இவர்கள் வசிக்குமிடம் நெரிசலான பகுதியாக இல்லாமல், சற்று காற்றோட்டமும், நெருக்கமில்லாத பகுதியில் வசிப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

துலாம் ராசி நாதன் சுக்கிர பகவான் (வெள்ளி கிரகம்). உங்கள் வாழ்நாளில் எப்போதும் நல்ல பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கன்றுக் குட்டியை ஈன்ற பசுமாட்டிற்கு அகத்திக் கீரை, பழங்களை வழங்குவதால் நல்ல பலன்கள் பெறலாம்.

விருச்சிக ராசியினர் எப்போதும் சுப பலன்களைப் பெற வேண்டுமென்றால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசிய உங்களின் குல தெய்வ கோயிலுக்கு சென்று படையலிட்டு வழிபாடு செய்து வருவது அவசியம்.

தனுசு ராசி அதிபதி குரு பகவான். அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வதும், மஞ்சள் நிற பூக்களால் குரு பகவானை வழிபடுதல், இனிப்பு பதார்த்தங்களைப் பக்தர்களுக்கு நைவேத்தியமாக வழங்குவதும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் மிக நல்ல பலனைத் தரும்.

மகர ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமை தோறும் முருகப் பெருமானையும், சனிக் கிழமைகளில் ராமர், அனுமன் வழிபாடு செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். அதனால் சனிக்கிழமை தோறும் சிவ வழிபாடு செய்து, நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், காலை உணவு உண்ணும் முன் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிறந்தது.

மீன ராசிக்கு அதிபதி குரு பகவான். நீங்கள் குருவின் அருள் பெற சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களில் வழிபடுவதும், குரு பகவானுக்குரிய கோயிலுக்கு சென்று வழிபடுவதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைப் பெறலாம்.
Tags:    

Similar News