உள்ளூர் செய்திகள்
வடபழனியில் செல்போன் பறித்த வாலிபருக்கு தர்ம அடி
வடபழனியில் செல்போன் பறித்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போரூர்:
சென்னை பல்லாவரம் மகாநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (20). வடபழனி திருநகர் பகுதியில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். நவீன்குமார் நேற்று மாலை பட்டறை முன்பு நின்றபடி செல்போனில் வீடியோ கால் மூலமாக நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் நவீன்குமாரின் செல்போனை பறித்து தப்ப முயன்றான். நவீன்குமார் மற்றும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முகமது (22) என்பது தெரிந்தது. அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.