செய்திகள்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

கருணாநிதி வழியில் எனது செயல்பாடு இருக்கும் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

Published On 2020-09-10 07:31 GMT   |   Update On 2020-09-10 07:31 GMT
கருணாநிதி வழியில் தனது செயல்பாடுகள் இருக்கும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக பொதுக்குழு நேற்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. க.அன்பழகனின் மறைவுக்குப் பிறகு திமுக பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில், திமுக நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து திமுக பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தின் முன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது தனக்கு பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது எனவும், தான் இதுவரை கட்சியிலிருந்து பெற்ற பயிற்சியை வைத்து இந்த பொறுப்பை சமாளிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கருணாநிதி தலைவரான பிறகு கூட அவரது குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்தது. அவர் வழியில் தான் நான் நடப்பேன்.

நான் என்றைக்கும் திமுக காரன் தான். தற்போது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பொறுப்புகள் அதிகமாகி உள்ளது. தலைவருக்கு உறுதுணையாக இருந்து கட்சிக்காக உழைப்பேன். கட்சியில் இதுவரை வகுத்த பொறுப்பை வைத்து புதிய பதவியை சிறப்பாக செய்வேன்” என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News