உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் முளை விட்டுள்ளதை படத்தில் காணலாம்.

விலை உயரும் எதிர்பார்ப்பில் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் முளைவிட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி

Published On 2021-12-02 08:42 GMT   |   Update On 2021-12-02 08:42 GMT
முன்பு ஏக்கருக்கு 10 டன் சின்னவெங்காயம் கிடைத்து வந்தது. தற்போது 3 டன் வெங்காயம் கிடைப்பதே அரிதாக உள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுகின்றனர். ஒரு ஏக்கருக்கு வெங்காயம் பயிரிட விதை வெங்காயம், நாற்று நடவு கூலி, மற்றும் அறுவடைக் கூலி என சுமார் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது, நல்ல விளைச்சல் இருந்தால் 6 முதல் 8 டன் வரை வெங்காயம் கிடைக்கும். 

இந்த நிலையில் கடந்த மாதங்களில் கிலோ ரூ.30க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.15க்கு விற்கிறது. விலை குறைவானதால் பல்லடம் பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பட்டறைகள் அமைத்து வெங்காயத்தை இருப்பு வைத்தனர்.

ஆனால் வெங்காயம் விலை உயரவில்லை. இதற்கிடையே இருப்பு வைக்கப்பட்ட வெங்காயங்கள் முளைவிடத் துவங்கியுள்ளன. இதனால் வெங்காயத்தை கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். 

இதுகுறித்து வெங்காய விவசாயி அல்லாளபுரம் செந்தில் குமார் கூறியதாவது :

முன்பு ஏக்கருக்கு 10 டன் சின்னவெங்காயம் கிடைத்து வந்தது .தற்போது 3 டன் வெங்காயம் கிடைப்பதே அரிதாக உள்ளது .வெங்காயம் அறுவடை செய்தவுடன் உரிய விலை கிடைக்காததால் பட்டறை போட்டு இருப்பு வைத்தோம் .

ஆனால் தற்போது வெங்காயம் விலை உயரவில்லை. இருப்பு வைத்த வெங்காயமும் முளைக்கத் துவங்கிவிட்டது. தரமான வெங்காயம் இருந்தால் மட்டுமே வியாபாரிகள் வெங்காயத்தை வாங்குவார்கள். வெங்காயம் முளை விட்டுள்ளதால், கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளோம். 

விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதபோது அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும். அப்போதுதான் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்றார். 
Tags:    

Similar News