ஆன்மிகம்
சித்ரகுப்தன்

சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி

Published On 2021-04-26 03:54 GMT   |   Update On 2021-04-26 03:54 GMT
நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலனை நமக்கு வழங்கும். சந்திர பலம் பெற்ற ஓர் அற்புதமான நாள்தான் ‘சித்ரா பவுர்ணமி’.
பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும்தான். அவற்றுள் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலனை நமக்கு வழங்கும். சந்திர பலம் பெற்ற ஓர் அற்புதமான நாள்தான் ‘சித்ரா பவுர்ணமி’.

நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ர குப்தனை வழிபட்டு கொண்டாடும் விழாவாக இந்தப் பவுர்ணமி அமைகின்றது. நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் மாற்ற சித்ர குப்தன் வழிபாட்டை, சித்ரா பவுர்ணமியில் செய்ய வேண்டும்.

மாதங்களில் முதல் மாதமாக வருவது, சித்திரை. அந்தச் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சந்திரன் முழுமையடைகின்றார். நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள்தான், சித்ரா பவுர்ணமி. அப்படிப்பட்ட தித்திக்கும் திருநாள் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2021) திங்கட்கிழமை அன்று வருகின்றது. இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழிபிறக்கின்றது.

சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையிலும் தனிச் சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள், இல்லத்திலேயே விரதமிருந்து சித்ர குப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்தச் சித்ரா பவுர்ணமி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதான்யம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்ரகுப்தன் படியளப்பு’ என்று எழுதி வைப்பர். சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு, தட்டைப்பயிறு-மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பு நெய்யும் வைக்க வேண்டும்.

விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும். எந்தக் கிழமையில் பவுர்ணமி வருகின்றதோ அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும் வழிபடுபவர்களுக்கு கிடைக்கும். இந்த வருட சித்ரா பவுர்ணமி திங்கட்கிழமை வருகின்றது. மனதுகாரகன் சந்திரனுக்குரிய நாளில், சந்திரன் முழுமையடைந்து பிரகாசிக்கும் இந்த தினத்தில் சந்திரனை வழிபாடு செய்வதன் மூலம் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். சித்ரா பவுர்ணமி விரதத்தின் மூலம் திருமண யோகமும் கிட்டும். தித்திப்பான வாழ்க்கையும் அமையும். அன்று மலைவலம் வருவதன் மூலம் மகத்தான பலன் பெறலாம்.

‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
Tags:    

Similar News