செய்திகள்
விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடன் வழங்கவேண்டும்- தினகரன் வலியுறுத்தல்
விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடன் வழங்கவேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் வர்த்தகம் செய்ய வாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2.62 லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன் கீழ் 1.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதிலிருந்து கடன் வழங்க 44 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிறு பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தாமல் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கடன் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.