ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

Published On 2021-11-09 08:08 GMT   |   Update On 2021-11-09 08:08 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று பரவலால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், மேலும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை, தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றத்தை அடுத்து கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News