செய்திகள்
ஜான்குமார் எம்எல்ஏ

ஊரடங்கு உத்தரவை மீறிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது வழக்கு

Published On 2020-03-26 08:08 GMT   |   Update On 2020-03-26 08:08 GMT
தனது வீட்டு முன்பு தொகுதி மக்களை திரட்டிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவசிய பணி தவிர வேறு பணிக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீசார் விரட்டி அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது வீட்டு முன்பு தொகுதி மக்களை திரட்டிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுவை காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார். இவர் நெல்லிதோப்பு சவரிபடையாட்சி வீதியில் வசித்து வருகிறார்.

ஜான்குமார் தனது வீட்டு முன்பு பொதுமக்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கினார். இதனால் அங்கு கூட்டம் கூடியுள்ளது. தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள்.

மேலும் மக்கள் கூட்டத்தை கூட்டியதால் ஜான்குமார் எம்.எல்.ஏ. மீது இந்திய தண்டனை சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்குகளை உருளையான்பேட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை மீறுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி. 200-க்கும் மேற்பட்டோரை வீட்டு முன் கூட்டி பொருட்களை வினியோகம் செய்தது தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது.

சட்டத்தை பின்பற்றாமல் அதை மீறும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தி. சட்ட விதிகளை கடைபிடிப்பது சட்டத்தை உருவாக்குபவர்களின் பெரிய பொறுப்பு.

இவ்வாறு கிரண்பேடி தனது பதிவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News