செய்திகள்
தமிழக அரசு

ஆவின் அதிகாரிகள் 34 பேர் கூண்டோடு மாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

Published On 2021-07-19 03:27 GMT   |   Update On 2021-07-19 03:27 GMT
ஆவின் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் சில அதிகாரிகள் துணைபோனதாகவும் தகவல்கள் வெளியாகின.
சென்னை:

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆவின் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குற்றம்சாட்டி வந்தார். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி 1½ டன் இனிப்புகள் ஆவினில் வாங்கியதற்கு பணம் செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமின்றி, ஆவின் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் சில அதிகாரிகள் துணைபோனதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது, ஆவின் புதிய நிர்வாக இயக்குனராக கந்தசாமி பதவி ஏற்றதும், முதல் கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.18 கோடி வரை இழப்பை ஏற்படுத்தி வந்த சி.எப். ஏஜெண்டு முறையை ரத்து செய்தார். முறைகேடான பணி நியமனங்களும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 34 முக்கிய அதிகாரிகளை கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பால் கூட்டுறவு, பால் உற்பத்தி கூட்டமைப்பில் வர்த்தக பிரிவின் பொது மேலாளர்களாக இருந்த ஜி.ரமேஷ்குமார், புகழேந்தி, துணை பொது மேலாளர்களான குமரன், அன்புமணி, வசந்தகுமார், செல்வம், முருகன், சாம்பமூர்த்தி, சரவணக்குமார், அமரவாணி, பார்த்தசாரதி, சதீஷ், சாரதா, ஷேக் முகமது ரபி, சுஜாதா, சுந்தரவடிவேலு, நாகராஜன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆவின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமியை நியமனம் செய்து உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News