ஆன்மிகம்
திருப்பதி கோவிலில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி, நேற்று இரவு நடந்த விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது: ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2021-10-07 07:02 GMT   |   Update On 2021-10-07 07:02 GMT
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலத்துடன் இன்று தொடங்கியது. மின்விளக்கு, மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலிக்கிறது. இன்று மாலை 5.10 மணிமுதல் 5.30 மணிக்கு இடையே ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சே‌ஷத்தின் (ஆதிசே‌ஷன்) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை 7 தலைகளுடன் கூடிய பெரிய சே‌ஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள்.

புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் விரதம் இருந்து கோவிந்த மாலை அணிந்து பாத யாத்திரை வருவது வழக்கம். ஆனால் மாலை அணிந்திருந்தாலும் டிக்கெட் இருந்தால் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திருமலையில் உள்ள தரிகொண்ட வேங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தித்தில் அன்னதானம் வழங்கப்படும்.

பக்தர்களுக்காக திருப்பதி - திருமலை இடையே 200 அரசு பஸ்கள் மூலம் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News