செய்திகள்
அனுப்பர்பாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
அனுப்பர்பாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏ.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த கடையில் ஏராளமான புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான நிக்சன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 16 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.