செய்திகள்
ராமநாதபுரம் அருகே நாட்டுவெடிகுண்டுகள் கைப்பற்றிய சம்பவத்தில் 2 பேர் கைது
ராமநாதபுரம் அருகே நாட்டுவெடிகுண்டுகளை கைப்பற்றிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் தோப்பு ஒன்றில் நேற்று முன்தினம் 2 நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட கார்த்திக், விக்கி ஆகியோரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி இறந்த கார்த்தியின் தரப்பினர் பழிக்கு பழிவாங்குவதற்காக இந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி மாட்டிவிடும் வகையில் எதிர்தரப்பை சேர்ந்தவர்களே பதுக்கி வைத்துவிட்டு தகவல் தெரிவித்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக வாலாந்தரவை அம்மன்கோவிலை சேர்ந்த பெரியசாமி மகன் பூமிநாதன் (வயது49) , லெட்சுமணன் மகன் சரவணன் (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 29-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.